Translate

கேழ்வரகு கூழ்

மிகவும் சத்துவாய்ந்த நமது பாரம்பரிய கம்பு கேழ்வரகு வரகரிசி கூழ்!!

Sudagarkrishnanchannel
Kezhvaragu koozh

தேவையான பொருட்கள்:

  1. கம்பு மாவு - 1 கரண்டி (50 கிராம்)
  2. கேழ்வரகுமாவு-3 கரண்டி (150 கிராம்)
  3. வரகரிசி-100 கிராம்
  4. வெங்காயம்- 2
  5. தயிர்-1கப்
  6. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர்- 1கப்
  7. உப்பு- தேவையான அளவு

செய்முறை:

  பாத்திரத்தில் வடித்த கஞ்சி தண்ணீரை ஒரு கப் அளவு எடுத்துக்கொள்ளவும். வடித்த கஞ்சி தண்ணீர் ஆறிய பின்னர், கேழ்வரகு மாவு+கம்பு மாவு இரண்டையும் 3:1 என்கிற விகிதத்தில் கலந்து கொள்ள வேண்டும். காலை ஏழுமணி அளவில் கேழ்வரகு மாவு கரைசலை தயார் செய்ய வேண்டும். தண்ணீர் சேர்க்ககூடாது. வடித்த கஞ்சியை பயன்படுத்தி தான் கேழ்வரகு மாவினை கரைக்க வேண்டும். கைகளால் தான் கலக்க வேண்டும். கரண்டியை பயன்படுத்தினால் மாவு புளிக்காது. இட்லி மாவு பதத்திற்கு, இந்த இரண்டு மாவினையும், கட்டிகள் எதுவும் இல்லாமல் கைகளால் கரைக்கவும். இட்லி மாவினை போல புளித்து, உப்பலாகி வரும். கரைத்த  கேழ்வரகு மாவு, கம்புமாவு கலவையை மூடி ஒரிடத்தில் ஓரமாக வைத்துவிடவும். மாவு புளித்து வருவதற்கு மாலை 5-மணி வரை கூட ஆகலாம். அது நீங்கள் இருக்கும் இடத்தின் சூழலையும், உங்கள் கை பக்குவத்தையும் பொறுத்தது. மாவு புளித்த பின்னர், அடிகனமான பாத்திரம், அல்லது மண் பானையை எடுத்து கொள்ளவும். ஒன்றரை கப் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வரகரிசி அல்லது உடைத்த குருணை நொய் அரிசி எதாவது ஒன்றை  அரை டம்பளர் அளவு போதுமானது, எடுத்து கொள்ளவும். சமைக்க துவங்குவதற்கு பத்துநிமிடங்களுக்கு முன்னர், அரிசியை ஊற வைத்து எடுத்துகொள்ளவும். நன்றாக கொதிக்கும் தண்ணீரில் கழுவி பத்து நிமிடம் ஊற வைத்த வரகரிசியை கொட்டி, கிளறிவிடவும். ஏழு நிமிடங்கள் வேக வைத்தால் போதும். அதாவது அரிசி பாதியளவிற்கு வேகவிட்டால் போதும். அரிசி ஓரளவு வெந்த பிறகு, கேழ்வரகு மற்றும் கம்பு மாவினை சிறிது, சிறிதாக சேர்த்து கிளறி கொண்டே வர வேண்டும். நீளமான கரண்டியை பயன்படுத்தவும். கிராமங்களில் தென்னை கிளைகளின் தண்டு பகுதியை வெட்டி பயன்படுத்துவார்கள். அடுப்பின் தணலை குறைந்த தீயில் வைக்க வேண்டும். இல்லையென்றால் அடிபிடித்து கறுகிவிடும். கேழ்வரகு மாவு கரைசல் கட்டியாகி கொண்டே வரும், நிறம் மாறி, காப்பிநிறத்தில், நல்ல வாசனையும் வர ஆரம்பிக்கும். கேழ்வரகு சீக்கிரமாக வெந்து விடும். ஏழிலிருந்து பத்து நிமிடங்கள் போதும். நீங்கள் புதியதாக சமைக்கீறீர்கள் என்றால், கைகளை தண்ணீரில் நனைத்த பிறகு, கூழ் மீது கையை வைத்து பாருங்கள். ஒட்டாமல் இருந்தால், கூழ் போதுமான அளவு வெந்து விட்டது என்று அர்த்தம். இப்பொழுது கூழ் தயாராகிவிட்டது. இரவு முழுவதும் வைத்துவிடவும். சூடாக இப்பொழுதே கூட மோர் கலந்து சாப்பிடலாம். சுவையாகதான் இருக்கும். ஒருவேளை  பத்துநிமிடங்களுக்குப் பிறகும், கூழ் கட்டியாக களிபோல ஆகாமல், கூழ் தண்ணியாக இருக்கிறதென்றால், கவலைபட வேண்டாம். அப்படியே வைத்துவிடுங்கள். காலையில் கட்டியாகி களிபோல தானாகவே மாறிவிடும். முதன்முதலில் நான் கேழ்வரகு கூழ் சமைக்கும் பொழுது தோசைமாவினை போல நீர்த்து இருந்தது. கேழ்வரகு கூழ் செய்வதென்பது பெரிய செயல்முறை (Process) நமக்கெல்லாம் வராது என்று வருந்தமடைந்துவிட்டேன். பின்னர் என்னுடைய பாட்டி ஊருக்கு சென்றிருந்தபொழுது, பக்கத்திலே உட்காரவைத்து கற்றுதந்தார்கள். நான் சென்னை வந்தபிறகு செய்து பார்த்து, நானே அசந்துபோய்விட்டேன். என்னுடைய பாட்டியின் கைபக்குவத்தில் தயாரித்த கூழின், அதே சுவையில் கேழ்வரகு கூழ்-என்னுடைய கைவண்ணத்தில்! 
 காலையில் கேழ்வரகு கூழில் தண்ணீர், மோர் வெங்காயம் கலந்து சாப்பிட மிகுந்த சுவையாக, தேவாமிர்தம் போல இருக்கும். அப்படியே களியாக கூட தயிர், வெங்காயம் சேர்த்து சாப்பிடலாம். கருவாட்டு குழம்பு, காரக்குழம்புடன் சேர்த்து சாப்பிடலாம். மிகுந்த ஆரோக்கியத்துடன் கூடிய காலை உணவாக இதனை நம்முடைய மூதாதையர்கள் பயன்படுத்தினர். ஏனென்றால் நீண்ட நேரம் பசிக்காது, வயிறு நிறைவடைந்தது போல இருக்கும். காலையிலிருந்து மாலை வரை வயல் வெளிகளில் கடினமான வேலைகளை செய்ய தேவையான ஆற்றலை தருவதாய் இருந்தது. உடலுக்கு குளிர்ச்சியையும், நோயெதிர்ப்பு சக்தியையும் தரக்கூடியது. இதனை சுவைத்து பார்த்தால் அடிக்கடி சமைப்பீர்கள். தயிர் கலக்காமல், கை படாமல் இரண்டு, முன்று நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தேவையானபொழுது எடுத்து, தண்ணீர் உப்புத்தூள் தயிர்,வெங்காயம் கலந்து பயன்படுத்தலாம்.  கேழ்வரகு மாவினை புளிக்க வைக்காமல், நேரிடையாகவே கூட, குறுணை அரிசி வேகவைத்து சிறிதுசிறிதாக கேழ்வரகுமாவினை சேர்த்து கூழ் தயாரிக்கலாம். ஆனால் அவ்வளவு சுவையாக இருக்காது. இந்தமுறையில் தான் கிராமங்களில் கேழ்வரகு கூழ்  தயாரிக்கப்படுகிறது. மிகவும் சுவைமிக்க  ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலைஉணவு. நீங்களும் உங்கள்வீட்டில் கேழ்வரகு கூழ்  சமைத்துப் பாருங்கள்.

Sudagarkrishnanchannel
Kezhvaragu koozh


கேழ்வரகில் உள்ள ஊட்டசத்துக்கள்:

 கேழ்வரகு சிறிய தானியம் என்பதால் அதை பாலிஷ்செய்வதும், தோலை நீக்கவும் முடியாது. அதனால் ஊட்டசத்துக்கள் அனைத்தும் முழுவதுமாய் கிடைக்கிறது. கேழ்வரகில் கால்சியம்சத்தும், நார்சத்தும் அதிகளவில் உள்ளது. 100-கிராம் கேழ்வரகில், 344-மில்லிகிராம் கால்சியம் நிறைந்துள்ளது. கேழ்வரகு தோலில் பால்ஃபெனால்சு இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு. குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் முதல் இணை உணவு கேழ்வரகுதான். தாய்பாலுக்கு அடுத்தபடியாக அதிக ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. கேழ்வரகில் இருக்கின்ற நார்சத்து உடல்எடையை கட்டுபாட்டிற்குள் வைக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. தூக்கமின்மை, மனச்சோர்வு, படபடப்பு, மனழுத்தம் போன்றவற்றையும் குணமாக்கவல்லது.  இரத்தசோகை குறைபாட்டை போக்கி, இமோகுளோபின் அளவினையும் அதிகரிக்கிறது. கேழ்வரகினோடு, பனைவல்லம் சேர்த்து புட்டு, அடையாக செய்து சாப்பிடுவது விரைவில் இமோகுளோபின் அதிகரிக்க எளிய வழியாகும். என்னுடைய நாத்தனாருக்கு திருமணமான புதியதில் கருஉருவாகி இரத்தசோகையால் கருகலைந்துவிட்டது.  மருத்துவமணையில் பி-பாசிட்டிவ் மூன்றுபாட்டில் இரத்தம் ஏற்றப்பட்டது. பின்னர் நிறைய மருந்துமாத்திரைகளும் வாங்கிகொண்டு வீடுவந்து சேர்ந்தாள். மாதுளம் பழம் நிறைய எடுத்துக்கொண்டாள். இரண்டுவாரங்கள் கழித்து சோதித்தபிறகும் இமோகுளோபின் அதிகரிக்கவே இல்லை.  என்னுடைய அம்மா அவளுக்கு, அடிக்கடி முருங்கைகீரை, கேழ்வரகு சேர்த்து சமைத்து கொடுமா, என்று கூறினார்கள். அதிலிருந்து வாரத்திற்கு நான்கு முறை கேழ்வரகு அடை, கேழ்வரகு புட்டு, கேழ்வரகு கஞ்சி செய்துகொடுத்தோம். பத்தே நாளில் இமோகுளோபின் 13.5 என்றளவிற்கு உயர்ந்துவிட்டது. அதனால் கர்ப்பிணிபெண்கள், வளரும் குழந்தைகள் அனைவருமே கேழ்வரகு உணவுகளை வாரத்தில் மூன்று, நான்கு முறை எடுத்துக்கொள்ளலாம். இது எனக்கு அனுபவப்பாடம். 
கம்பு, செரிமானம் அடைய சிறிது நேரம் எடுக்கும். அதனால் கோடைகாலத்தில் குறைவான அளவில் எடுத்துக்கொள்வது சிறந்தது.  பித்தப்பைகற்கள் ஏற்படுவதை தடுக்கிறது. உடலின் அனைத்து உறுப்புகளின் வளர்ச்சிக்கும், சிறந்த செயல்பாட்டிற்கும் தேவையான ஊட்டசத்துக்களை கொண்டுள்ளது. கம்பினை உணவோடு சேர்த்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படாது. கடினமான உடல் உழைப்பு வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான வலிமையை தரக்கூடியது. புரோட்டின், மெக்னீசியம், நார்சத்து, கால்சியம் சத்துக்கள் கம்பில் நிறைந்துள்ளது. வரகு, திணை, சாமை, குதிரைவாலி போன்ற பலவகையான சிறுதானியங்கள் நமது உணவுபட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட்டது. ஆனால் கேழ்வரகு நடைமுறையில் இருந்து கொண்டுதான் வருகிறது. எதோ ஆடிமாதத்தில் மாரியம்மன் கோவிலுக்கு கூழ்ஊற்ற மட்டுமே பயன்படுத்தாமல் தினமும் உணவுவகைகளில் பயன்படுத்திட வேண்டும். பிற சிறுதானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பாரம்பரியம், மூதாதையர்கள் வாழ்கை முறை என்பதெல்லாம் இரண்டாவது. முதலில் ஆரோக்கியமான வாழ்கை அவசியமானதன்றோ! அதற்காகவாவது சிறுதானியங்கள் பக்கம் பார்வையை திருப்புவோம்! நன்றி.

கோ.இந்திரா பிரியதர்ஷினி Msc .MEd .MBA 



Post a Comment

0 Comments