Translate

உருளைகிழங்கு பட்டாணி மசாலா

கல்யாணவீட்டு உருளைகிழங்கு பட்டாணி பொரியல்:


Sudagarkrishnanchannels
Potato peas Masala

தேவையான பொருட்கள்:

  1. உருளை கிழங்கு -1/4 கிலோ
  2. பட்டாணி-100 கிராம்
  3. வெங்காயம்-1பெரிய அளவு
  4. தக்காளி-2
  5. குழம்பு மிளகாய் தூள்-2ஸ்பூன்
  6. இஞ்சி-சிறிய துண்டு.
  7. பூண்டு -5பல்
  8. கறிவேப்பிலை-1கொத்து
  9. கறி மசால் தூள்- சிறிதளவு
உப்பு-தேவையான அளவு

தாளிக்க:

  • கடுகு-1/2ஸ்பூன்
  • சீரகம்-1/4ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு-1/2ஸ்பூன்
  • கடலை எண்ணெய்- ஒரு குழி கரண்டி

செய்முறை:

    வாணெலியில்  குழி கரண்டி அளவு கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு அரைஸ்பூன், சீரகம் அரைஸ்பூன், கறிவேப்பிலை ஒரு கொத்து, தாளித்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கிகொள்ளவும். வெங்காயம் வதங்கிய பின்னர், இஞ்சி சிறிதளவு, பூண்டு ஐந்தாறு பற்கள் இரண்டையும் தட்டி போட்டுக் கொள்ளவும். இஞ்சி பூண்டு பற்களை சேர்க்காமலும் செய்யலாம். பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளியை போட்டுக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியை தொக்கு பதத்திற்கு வதக்கி கொள்ளவும். தக்காளி விரைவாக வதங்கிட சிறிதளவு உப்புத்தூள் சேர்த்து கொள்ளவும். மூடியிட்டு சிறிது நேரம் வதங்கிட விடவும். தக்காளி வதங்கிய பின்னர், குழம்பு மிளகாய் தூள் இரண்டு டீஸ்பூன், கறிமசால் தூள் அரைடீஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளவும். சாதாரண தண்ணீருக்குப் பதிலாக பச்சை பட்டாணி வேக வைத்த தண்ணீரை ஊட்டச்சத்துக்கள் வீணாகாத வண்ணம் சேர்த்து கொள்ளலாம். பச்சை பட்டாணியை முதல்நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விடவும். பச்சை பட்டாணி மற்றும் உருளைகிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து தனித்தனியாக வேக வைத்து எடுத்து கொள்ளவும். உருளை கிழங்கின் மேல்தோலூரித்து மசித்து கொள்ளவும். தக்காளி வதங்கி தொக்கு பதத்திற்கு வந்ததும், அடுப்பை நிறுத்தி விடலாம். இப்பொழுது வேக வைத்து, மசித்த உருளைகிழங்கு, பட்டாணி இவற்றை சேர்த்து கிளறி கொள்ளவும். ரொம்பவும் அழுத்தி, நிறையதரம் கிளற வேண்டாம். ஓரளவு கிளறி, மசாலாக்கள் உருளைகிழங்கின் அனைத்துபக்கங்களிலும் சேரும் வண்ணம் கிளறி விடுங்கள். உப்பு சுவைத்து பார்த்து கொள்ளவும். சுவையான கல்யாண வீட்டு பட்டாணி உருளைகிழங்கு பொரியல் தயார். பூரி, சப்பாத்திக்கும் உருளைகிழங்கு பட்டாணி மசாலா நீங்கள் துணைஉணவாக வைக்கலாம். தயிர் சாதம், சாம்பார் சாததிற்கு பொருத்தமாக இருக்கும். சாப்பாத்தியினுள் வைத்து ரோல் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


Type-2

உருளைகிழங்கு பட்டாணி மசாலா/Potato Peas Masala:


தேவையான பொருட்கள்:

  1. உருளை கிழங்கு -1/4 கிலோ
  2. பட்டாணி-100 கிராம்
  3. வெங்காயம்-1பெரிய அளவு
  4. மஞ்சள்தூள்-சிட்டிகை அளவு
  5. தனிமிளகாய் தூள்-2ஸ்பூன்
  6. இஞ்சி-சிறிய துண்டு.
  7. பூண்டு -5பல்
  8. கறிவேப்பிலை-1கொத்து
  9. கறி மசால் தூள்- சிறிதளவு
  10. பெருங்காயத்தூள்-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு

தாளிக்க:

  • கடுகு-1/2ஸ்பூன்
  • சீரகம்-1/4ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு-1/2ஸ்பூன்
  • கடலை எண்ணெய்- ஒரு குழி கரண்டி

செய்முறை:

    வாணெலியில்  குழி கரண்டி அளவு கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு அரைஸ்பூன், உளுத்தம்பருப்பு ஒருஸ்பூன் சீரகம் அரைஸ்பூன், கறிவேப்பிலை ஒரு கொத்து, தாளித்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கிகொள்ளவும். இஞ்சி சிறிதளவு, பூண்டு ஐந்தாறு பற்கள் இரண்டையும் சின்ன மிக்ஸிஜாரில் மழமழவென்று அரைத்து கொள்ளவும். இஞ்சி, பூண்டு அரைவை ஒரு ஸ்பூன் சேர்த்து, பச்சைவாசனை போக வதக்கி கொள்ளவும். வெங்காயம், இஞ்சிபூண்டு அரைவை வதங்கிய  பின்னர், தனி மிளகாய் தூள் இரண்டு டீஸ்பூன், கறிமசால் தூள் அரைடீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், உப்புத்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி கொள்ளவும்.  பச்சை பட்டாணியை முதல்நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விடவும். பச்சை பட்டாணி மற்றும் உருளைகிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து தனித்தனியாக வேக வைத்து எடுத்து கொள்ளவும். உருளை கிழங்கின் மேல்தோலூரித்து மசித்து கொள்ளவும்.  இப்பொழுது வேக வைத்து, மசித்த உருளைகிழங்கு, பட்டாணி இவற்றை சேர்த்து கிளறி கொள்ளவும். ரொம்பவும் அழுத்தி, நிறையதரம் கிளற வேண்டாம். ஓரளவு கிளறி, மசாலாக்கள் உருளைகிழங்கின் அனைத்துபக்கங்களிலும் சேரும் வண்ணம் கிளறி விடுங்கள். உப்பு சுவைத்து பார்த்து கொள்ளவும். சுவையான  பட்டாணி உருளைகிழங்கு மசாலா தயார். பூரி, சப்பாத்திக்கும் உருளைகிழங்கு பட்டாணி மசாலா நீங்கள் துணைஉணவாக வைக்கலாம். தயிர் சாதம், சாம்பார் சாததிற்கு பொருத்தமாக இருக்கும். சாப்பாத்தியினுள் வைத்து ரோல் செய்து
பிள்ளைகளுக்கு கொடுக்கலாம்.

உருளைகிழங்கு பட்டாணியில் உள்ள ஊட்டசத்துக்கள்

உருளைகிழங்கு: 

லகளவில் நான்காவதாக அதிகம் பயிரிடப்படும் தாவரம் உருளைகிழங்காகும். நெற்பயிர், கோதுமை, மக்காசோளப்பயிர் அதற்கடுத்தபடியாக உலகளவில் நான்காவது இடத்தில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. உருளைகிழங்கு அதிகளவில் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது.  உருளைக்கிழங்கில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. உருளைக்கிழங்கை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும். வறுத்தோ, பொரித்தோ சாப்பிடுவதால் முழுமையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.  வயிறு, குடல் தொடர்பான பிரச்சனைகள், வயிற்றுப்புன், இரைப்பை தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு உருளைகிழங்கு சிறந்த பலனை தருகிறது. இருதயப் பிரச்சனைகள், இரத்த கொதிப்பு உள்ளவர்கள் உருளைகிழங்கை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. ஏனெனில் உருளைகிழங்கில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உருளைகிழங்கில்  புரதம் குறைவாகவும் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. ஒல்லியாக இருக்கும் குழந்தைகள் புஷ்டியாக வாரம் இருமுறை உருளைக்கிழங்கு கொடுத்து வரலாம். பிறந்த குழந்தைகளுக்கு ஆறாவது மாதத்தின் இறுதியிலோ அல்லது ஏழாம் மாதத்தின் துவக்கத்திலும் உருளைக்கிழங்கு உணவாக கொடுக்கலாம். நன்றாக வேக வைத்து மசித்து, சிறிதளவு தண்ணீர் அல்லது தாய்ப் பாலுடன் கலந்து ஊட்டி விடலாம்.  உருளைக்கிழங்கில் தாது உப்புகளும் வைட்டமின்களும் அதிகமாக உள்ளது. வாழை பழத்தில் இருப்பதை போன்று பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. அதிகளவில் கலோரிகளையும், நார்சத்தையும் கொண்டது. இதனால் ஜீரணத்திற்கு உதவுகிறது. உருளைக்கிழங்கு சூரிய ஒளியில் அதிக நேரம் வைக்கக் கூடாது. உருளைக்கிழங்கின் மீது அதிக நேரம் சூரிய ஒளி படுவதால் உருளைக்கிழங்கு பச்சை நிறத்தில் மாறக்கூடும். இவ்வாறு பச்சை நிறத்தில் காணப்படும் உருளைக்கிழங்குகளை தவிர்ப்பது நல்லது. இத்தகைய உருளைக் கிழங்குகளில் கிளைக்கோகலாய்ட் என்ற வேதிப்பொருள் உருவாகிறது. இந்த உருளைக்கிழங்குகளை சாப்பிடுவதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது.


பட்டாணி:


Sudagarkrishnanchannels
Potato Peas Masala 


அனைத்து காய்கறிகளையும் விட பச்சை பட்டாணியில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. கிமு 2000 ஆண்டிற்கு முன்பிருந்தே சீனர்கள் பச்சைப் பட்டாணியை உணவில் பயன்படுத்தி வருகின்றனர். பச்சைபட்டாணியில் நார்சத்து, புரதம், தயாமின், கொழுப்பு, ரிபோபிலவின், நியாசின் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இறைச்சியில் காணப்படும் அனைத்து ஊட்டசத்துக்களும் பச்சைபட்டாணியில் உள்ளது. உயர் இரத்தழுத்தம், மாரடைப்பு போன்ற நோய்களிலிருந்து பாதுகாப்பு அளித்து சுறுசுறுப்புடனும், இளமையோடும் வாழ உதவிசெய்கிறது.  விட்டமின் ஏ உள்ளதால் கண்பார்வை தெளிவிற்கும், கண்பிரச்சனைகளுக்கும் மருந்தாகிறது. வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால், சிறநாத நோய் எதிர்ப்புசக்தியை அளிக்கவல்லது. எலும்புகளும், பற்களும் உறுதியாக இருப்பதற்கும், எலும்பு மற்றும் பல் தொடர்பான நோய்களை தீர்த்து வைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. உடல் எடை குறைவாகி, மெலிந்து காணப்படுகிறவர்கள், உடல்எடையை அதிகரிக்க உணவாக எடுத்துக்கொள்ளலாம்.  பச்சைபட்டாணியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கைப்பிடி அளவு பட்டாணியை காய்கறிகளுடனோ, அல்லது வேகவைத்து சுண்டல்போலவும் தினமும் சேர்த்துக்கொள்ளலாம். அனைத்துவகையான ஊட்டசத்துக்களை கொண்டது. உலர்ந்த பட்டாணியை காட்டிலும் மூன்றுமடங்கு அதிகசத்து பச்சைபட்டாணியில் உள்ளது. மனநோய் , மனழுத்தம், உடல்சோர்வு போன்றவற்றையும் குணமாக்குகிறது. ஆண் மலட்டுதன்மை குணமாக்கவல்லது. மூளைவளர்ச்சிக்கும், ஞாபகசக்திக்கும் உதவுகிறது. வெண்டைக்காயை காட்டிலும் அதிகளவில் பாஸ்பரஸ் கொண்டுள்ளது. பச்சைபட்டாணியில் சுமார் 1500  இனங்கள் இருக்கிறது. 


ஹோட்டலில் செய்கின்ற சுவையான உருளைகிழங்கு பொரியலை நீங்கள் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். முயற்சி செய்து பார்க்க விரும்பினால், கிளிக் செய்யுங்கள். ஹோட்டல் உருளைகிழங்கு பொரியல். நன்றி!!



கோ.இந்திரா பிரியதர்ஷினி. Msc MEd MBA 

Post a Comment

0 Comments