Translate

Types of Greens And its Benefits

 கீரைகளின் வகைகளும் அதன் பயன்களும்

Sudagarkrishnanchannels
 Types of Greens and its benefits 


    ண்ணு சரியா தெரியலையா? அப்படின்னா, பொண்ணாங்கன்னி கீரையை சாப்பிடுங்க. பகல்ல கூட நட்சத்திரத்தை பார்க்கலாம். அமாவாசை இருட்லயும், கண் நல்லா தெரியும்; மூட்டுவலியா? முடகற்றான் கீரை தோசை இரண்டை சாப்பிடுங்க; வயிற்றில் புண்ணா மணதக்காளி கீரையை சாப்பிடுங்க; சளி இருமல் குறைவே இல்லையா? தூதுவளை ரசம் சாப்பிடுங்க. வாய்புண்ணா அகத்திகீரை கூட்டு சாப்பிடுங்க.. 

    தெல்லாம் 50 வருடங்களுக்கு முன்பு வீட்டில் பாட்டிகள் சொன்னவை. இதைதான் இன்று, மருத்துவர்களும், தினமும் ஒரு கீரையை உணவில் சேர்க்க சொல்லி  வலியுறுத்துகிறார்கள். கீரை உணவுகளை சாப்பிட சொல்லி, பாடாய்படுத்திய பாட்டிமார்களின் அருமையை இப்பொழுதுதான், நாம் உணரத் துவங்கி இருக்கிறோம். இருக்கிற கொஞ்ச காலமாவது ஆரோக்கியமாக நாளை கழிக்க வேண்டுமே!

துமட்டுமில்லாமல் ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க வேண்டியது நம்கடமை. நம் குழந்தைகளுக்கு கீரைகள், பழங்கள், தானியங்கள், காய்கறிகள் கலந்த சரிவிகித உணவுமுறையை பழக்க வேண்டும். உணவே மருந்தாகும். எல்லா ஊட்டசத்துக்களும் சரிவிகித அளவில் இருந்தாலே எந்த நோய்களும் நம்மை எட்டிபார்ப்பதில்லை.

 குழந்தைகளுக்கு கற்று தருவதற்கு முன், பெரியவர்களாகிய நமக்கே, கீரைகளின் பயன்களும், பயன்படுத்தும் முறைகளும் தெரிவதில்லை. 
 எந்தெந்த கீரைகளில் என்னென்ன சத்துக்கள் உள்ளது? எந்த கீரையை எந்த நோய்க்கு, எந்த அளவிற்கு, எப்பொழுது சாப்பிட வேண்டும்? என்பதும் முறையாக தெரியாது. 

 இந்த பதிவில் நீங்கள் பலவகையான கீரைகளையும், அதன்பயன்களையும் தெரிந்து பயன் பெறலாம். ஆரோக்கிய வாழ்விற்கு இந்த குறிப்புகள் உங்களுக்கு உதவ கூடும். வாங்க கட்டுரைக்குள் போகலாம்.

கீரைகளின் வகைகளும், பயன்களும்:

     இத்தனை வகையான கீரைகள் உள்ளதென பட்டியலிட்டு கூறிவிட முடியாது. ஏனெனில் வயல் வரப்புகளிலும், வாய்க்கால் ஓரங்களிலும்,  காடு  மேடுகளிலும் வளர்ந்த மூலிகைகளும், கீரைகளும் எண்ணிக்கையில் அடங்காதவை. தற்காலங்களில் மக்கள் பொதுவாக, முருங்கைகீரை, அரைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, பாலக்கீரை, பொண்ணாங்கன்னி கீரை, மணதக்காளி கீரை, வெந்தயக்கீரை, பருப்புகீரை, தூதுவளை என சில கீரைகளை மட்டுமே அதிகமாக சமைத்து உண்கின்றனர். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் இந்த கீரையை இதற்கு மருந்தாக/உணவாக எடுத்துக்கொள்கிறோம் என்று சொல்லி தருவார்கள். வாத நாரயணன் கீரை, சுக்காங்கீரை, பண்ணைக்கீரை, மசிலிக்கீரை, கல்யாண முருங்கை போன்ற அளப்பரிய சத்துக்களை கொண்ட ஏராளமான கீரைகளை கடைகளில் காண்பதே இல்லை. வாதம், பித்தம் கபம் இவை முன்றையும் சமநிலையில் வைத்திருந்தால் எந்த நோயும் அண்டாது என்கிறது சித்த மருத்துவம். இந்த மூன்றையும் சமநிலையில் வைக்கின்ற அளவிற்கு ஊட்டசத்துக்களை கொண்டது கீரைகள். 

1.முருங்கைகீரை:

முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம் காப்பர், ஜிங்க் வைட்டமின் ஏ, புரோட்டின், பைபர், கொழுப்பு, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி பீட்டாகரோட்டின், அமினோஆசிட்ஸ் போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது.

Sudagarkrishnanchannels
Types of Greens and its benefits 

முருங்கைகீரையானது தாய்பாலூட்டும் தாய்மார்களுக்கு வரப்பிரசாதமாகும் முருங்கை கீரை சாப்பிடுவதால் தாய்பால் சுரப்பு அதிகமாவதோடு, தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.  பிரசவத்தின் போது இழக்கப்படும் அதிகளவு சத்துக்களை மீட்டெடுக்க குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் உணவாகக் கொடுக்கலாம். இமோகுளோபின் அதிகரிக்க உதவுகிறது. இரத்தசோகை நோயை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த மருந்தாகும். ஆண்கள் பெண்கள் இருவருக்கும் ஏற்படும் மலட்டுத்தன்மையை  நீக்குகிறது. முருங்கை இலைகளை வேகவைத்து, வேக வைத்த தண்ணீரை குடித்து வருவதன் மூலம் உடல் சூடு தணிந்து மலச்சிக்கலும் கட்டுப்படுகிறது. உடலில் கைகால்களில் வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவலிகளால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலைகளை பறித்து அம்மியில் அரைத்து, வலியுள்ள இடத்தில், பற்று போல போட்டு வரலாம்.


2. அரைக்கீரை: 

Amaranthus dubius

  அரைக்கீரையை தினமும் உணவுடன் சேர்த்து வந்தால், உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தம் உருவாகும். எந்த வியாதி இருப்பவர்களும் அரை கீரை சாப்பிடலாம். அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. வாய்வு பிரச்சனைகள் வயிற்றுவலி மூட்டுவலி கைகால் வலி இவற்றையும் குணமாக்குகிறது. கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கவும், சளி இருமல் குணமாகும் உதவுகிறது எல்லா காலநிலைகளிலும் அரைக்கீரை சமைத்து சாப்பிட்டு வரலாம்

3. சிறுகீரை: Amaranthus campestris

          நார்ச்சத்து நிறைந்துள்ள கீரையில் சிறுகீரையும் ஒன்று. மலச்சிக்கல் தீவிரமான மூலம், போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறுகீரை சிறந்த மருந்தாகிறது. சிறுநீரகம் சிறுநீர்ப்பை அதை சார்ந்த உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. வைட்டமின் ஏ பி சி இரும்புச்சத்து, பொட்டாசியம் மாங்கனீஸ் போன்ற வைட்டமின்கள் சிறு கீரையில் உள்ளது. உடலின் எலும்பு வளர்ச்சி, இதயம், நரம்புகளின் சீரான இயக்கம் போன்ற ஒட்டு மொத்தமான உடலின் இயக்கத்திற்கு உதவுகிறது.

4.பொண்ணாங்கன்னி கீரை: Alternanthera sessilis

 கீரைகளின் அரசன் என்று பொண்ணாங்கன்னி கீரை அழைக்கப்படுகிறது. பொன்னாங்கண்ணி கீரை உணவில் சேர்க்கப்படும் கீரை, என்று மட்டும் நினைக்க வேண்டாம். இந்த கீரையின் இலைகள், பூக்கள் என ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. பொன்னாங்கண்ணிக் கீரையின் இலைகளை கசக்கி சாறு பிழிந்து, பூச்சி பூச்சி கடித்த இடத்தில் தடவினால், விஷம் முறிவு ஏற்படும். பூச்சிக்கடிக்கு செய்யப்படும், முதலுதவி சிகிச்சையாக இதனை பயன்படுத்தலாம்.

தலை உஷ்ணம் நீங்கவும், கண்பார்வை கோளாறுகள் குணமாக, மூலநோய்க்கும் பொண்ணாங்கன்னிகீரை சிறந்த மருந்தாகிறது. தாய்பால் சுரப்பை மேம்படுத்த உதவுகிறது.

5. பாலக்கீரை:

  
  ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுவதால், இரத்தசோகை நோயை கட்டுப்படுத்துகிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் சிறந்தது. பாலக் கீரையில் மெக்னீசியம், ஜிங்க் , காப்பர், வைட்டமின் கே அதிகமாக உள்ளதால், எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருக்க உதவுகிறது. பாலக்கீரையில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. மாரடைப்பு, இரத்த குழாய் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

6. பண்ணைக்கீரை:

 அனைத்து இடங்களிலும் செழிப்பாக வளரும் தன்மை கொண்டது இந்தக் கீரை.  இதற்கு மசிலி கீரை என்ற பெயரும் உண்டு. இதன் பூக்கள் பார்ப்பதற்கு கோழிக்கொண்டை பூக்களைப் போல காணப்படும். பண்ணைக் கீரையின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது. இந்த கீரையை அதிகம் கொழுப்புச்சத்து கொண்ட கீரை அதனால் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை கொடுத்தால் போதும். பண்ணைக்கீரை ஆனது பெண்களுக்கு மாத விலக்கின் போது ஏற்படும், அதிக ரத்தப்போக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினையையும் குணமாக்குகிறது. மேலும் குடல் புண்கள் தோல் வியாதிகள், இவற்றையும் குணப்படுத்துகிறது.  

7. முளைக்கீரை:

    தண்டுக்கீரையின் இளம் செடியே முளைக் கீரையாகும். முளைக்கீரை தாராளமாக அனைத்து இடங்களிலும் வருடம் முழுவதும் தொடர்ந்து கிடைக்க கூடிய கீரை வகையாகும். பச்சை மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும். மிதமான வெப்ப சீதோஷ்ண நிலையில் இந்த கீரை நன்றாக வளரும். முளைக் கீரையில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக்குவதுடன் உடலுக்கு நல்ல வலுவையும் கொடுக்கிறது. கொழுப்பை குறைக்கிறது. இரத்தசோகையை கட்டுப்படுத்துகிறது. சொறிசிரங்கு முதலிய தோல் நோய்களையும், நீர்க்கடுப்பையும் குணமாக்குகிறது.

8.பருப்புக்கீரை:

   ருப்புக் கீரையில் ஏராளமான மருத்துவ குணங்களும், சத்துக்களும் நிறைந்துள்ளது. வெயில் காலம் ஆரம்பித்து விட்டது, இந்த வெயில் காலத்தில் பருப்பு கீரை சாப்பிடுவதனால், சூட்டை குறைத்து, சூட்டினால் வரும் நீர் கடுப்பு, சூடு கட்டிகள், இவற்றை சரிசெய்யும். பருப்புக் கீரையில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதினால், கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் பருப்புக் கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வரலாம். பருப்புக்கீரை வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அழிக்கிறது. மேலும் மலச்சிக்கலை போக்குகிறது. வெயில் காலங்களில் வரும் வியர்வை கொப்பளங்கள், தீக்காய கொப்புளங்கள், இவற்றை சரி செய்ய, பருப்பு கீரையை நன்றாக அரைத்து கொப்பளங்கள்  மேலே பூசி வர விரைவில் குணமாகும். பருப்புக் கீரையில் அதிக அளவு விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் பி காம்ப்ளக்ஸ், போன்றவை இருப்பதினால் நுரையீரல் பாதிப்புகளில் இருந்து பெரிதும் பாதுகாக்கிறது. பருப்புக் கீரையை சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள், சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

9.கல்யாண முருங்கை கீரை


  முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்களைப் போலவே, கல்யாண முருங்கைக்கீரையிலும் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. ஆண்களுக்காக கடவுள் படைத்த கீரை முருங்கைக் கீரை என்றும், பெண்களுக்காக கடவுள் படைத்த கீரை கல்யாண முருங்கை கீரை என்று கிராமங்களில் சொல்வார்கள். பெண்களுக்கு வரும் வெள்ளைப்படுதலை குணமாக்க கல்யாண முருங்கைக்கீரையை பறித்து நன்றாக கழுவி, அரைத்து, தோசை மாவில் கலந்து சிறிதளவு உப்பு சேர்த்து, தாளித்து தோசை போன்று செய்து, மாதம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால், கர்ப்பப்பை பலமாகும். வெள்ளைப்படுதல் சரியாகும். பெண்கள் பிரசவத்திற்கு பின் கர்ப்பப்பையில் அழுக்குகள் படிந்து இருக்கும். இந்த அழுக்குகள் வெளியேறாமல் வயிற்றுக்குள்ளே இருந்துவிட்டால், அதுவே கர்ப்பப்பை புற்றுநோய்க்கு வழிவகுக்கும். இந்த அழுக்குகளை வெளியேற்றுவதற்கு கல்யாண முருங்கை இலையுடன் மிளகு, பூண்டு சேர்த்து, கொஞ்சமாக மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து நன்றாக கொதித்த பின்னர் வடிகட்டி தொடர்ந்து முப்பது நாட்கள் தினமும் குடித்துவர கர்ப்பப்பையில் இருக்கும் அழுக்குகள் வெளியேறும்.

 குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வயிற்றில் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும். ஆங்கில மருந்து மாத்திரைகளை உண்பதால், பூச்சிகள் மட்டுமே அழியும். பூச்சிகளின் முட்டைகள் பொரித்து திரும்பவும் பூச்சிகள் உருவாகும். ஆனால் கல்யாண முருங்கை இலைச் சாற்றை உட்கொள்வதால், வயிற்றில் உள்ள பூச்சிகள் முட்டைகள் அனைத்தும் அழிந்துவிடும். வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்க கல்யாண முருங்கை இலை சாற்றை எடுத்து, தேன் ஒரு தேக்கரண்டி அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் பூச்சிகள் தொல்லை நீங்கும்.


10. அகத்திகீரை:

       கத்திக் கீரையில் இலைகள், பூ, பிஞ்சு சமையலுக்கு பயன்படுகிறது. வேர் பட்டை மருத்துவ பயன்பாட்டில் பயன்படுகிறது. அகத்திகீரையை வாரம் ஒருமுறை சாப்பிடுவதால், டீ காபி குடிப்பதால் ஏற்படும் பித்தம், வெயிலில் அலைவதால் ஏற்படும் மலச்சிக்கல், வெப்பம் போன்ற பிரச்சனைகளை குணமாக்கிறது. குழம்பு வைப்பதில் கருவேப்பிலைக்கு பதிலாக அரைக்கீரையை தாளிக்க செய்யலாம். இதனால் உடல் சூடு, வயிற்று புண், வாய்ப்புண் நீங்கும் .

12. புளிச்சகீரை: 

    பெயருக்கு ஏற்றார்போல புளிப்பு தன்மையை கொண்ட இந்த கீரையை, நோஞ்சான் போல காணப்படும் குழந்தைகள் உடல் வலிமை பெற வாரம் ஒரு முறை கொடுக்கலாம். இந்தக் கீரையில் தாது உப்புகளும், வைட்டமின்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. இதன் பயனை தெரிந்ததால் தான், ஆந்திர மக்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் தன்மை இந்த கீரைக்கு உள்ளது.


13. மணதக்காளிகீரை:

   ருமம் தொடர்பான பல நோய்களுக்கு மருந்தாகிறது மணதக்காளி கீரை. இந்த கீரையில் வைட்டமின் கே, ஏ அதிகமாக உள்ளது. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள புண்களை குணமாக்கும். கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவது சிறந்த பலனை கொடுக்கும். சிறுநீர் வியர்வையைப் பெருக்கி, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். உடலில் நீர் கோர்த்து ஏற்படும் வீக்கம், வெப்பம் இவற்றையும் குணமாக்குகிறது. மணத்தக்காளி இலை சாறை 35 மில்லி வீதம் தினமும் எடுத்து வந்தால் சிறுநீர் பெருகும்.

14. பசலைக்கீரை:

     சலைக்கீரையில் வளமான அளவு இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சோகையில் இருந்து குணம் பெறலாம். மேலும் இதய நோயாளிகள் ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு சிறந்த மருந்தாக பசலைக்கீரை விளங்குகிறது. முக்கியமாக உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் அவர்களுடைய டயட்டில் பசலைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்த பலனை உடனே கொடுக்கும் . பசலைக்கீரையின் பயன்கள் ஏராளம். இப்படி சொல்லிக்கொண்டு போனால் சொல்லிக்கொண்டே போகலாம். அதனால் பசலைகீரையை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

 15.குப்பைக்கீரை:

குப்பைக் கீரையுடன் பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும். குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை சீரகம் இவற்றை ஒன்றாக அரைத்து சூப் வைத்து சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். குப்பை கீரையின் இலைகளை கட்டிகள், வீக்கங்களின் மீது பற்றுபோட்டால் வீக்கம் குறையும்.  குப்பைக் கீரையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தோல் நோய்களுக்கு பயன்படுத்தலாம். நெஞ்சு எரிச்சலுக்கு சிறந்தது.


16. வெந்தயக்கீரை:

  • நரம்புத்தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கீரை அருமருந்தாகும். வெந்தயக்கீரையை சமைத்து சாப்பிட்டுவந்தால், நரம்பு தளர்ச்சி விரைவில் குணமாகிறது .
  •  கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் உடனடியாக குணமடையலாம்.
  • சோர்வு, மயக்கம் இதனை நீக்குகிறது. உடலுக்கு தேவையான ஆற்றலையும் சுறுசுறுப்பையும் கொடுக்கிறது.
  • வெந்தயக் கீரையோடு நாட்டுக்கோழி மிளகு, சீரகம் தேங்காய், கசகசா சோம்பு சேர்த்து சமைத்து சாப்பிடும் பொழுது இடுப்பு வலி நீங்குகிறது.

17.புதினாகீரை:

   புதினா கீரையை கிரேக்கர்கள் உணவில் அதிகம் பயன்படுத்தினார்கள். இது வயிற்றுப் பொருமல், வயிற்று வலி போன்ற வயிறு சம்பந்தமான நோய்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. புதினாக்கீரை மாடி தோட்டத்தில் வளர்ப்பது மிகவும் சுலபமானது. ஒருமுறை வைத்தால் நான்கு ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது. கடையிலிருந்து வாங்கி வரும் புதினாக் கீரையை ஆய்ந்து எடுத்துவிட்டு அதன் தண்டுகளை நடவு செய்தாலே சுலபமாக யார் வேண்டுமானாலும் வீட்டில் புதினாவை வளர்த்து விடலாம்.
புதினாவில் வைட்டமின் ஏ, கால்ஷியம் பாஸ்பரஸ், இரும்புசத்து போன்றவை உள்ளது. வாந்தி, மயக்கம், தலைவலி இதனை கட்டுப்படுத்துகிறது. அதிகமான தலைவலிக்கு, புதினா இலைச் சாற்றை நெற்றியில் பூசி வரலாம். மாதவிடாய் பிரச்சினைகளையும், வெள்ளைபடுதல் பிரச்சினைகளையும் குணமாக்குகிறது. பசியை தூண்டி உணவிற்கு நல்ல ருசியையும் கொடுக்கிறது. அஜீரணம் பித்தம், வாய் துர்நாற்றம் பல் வலி பிரச்சினைகளையும் குணமாக்குகிறது. புதினா துவையல் நல்லெண்ணையுடன் சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி ஈரல் பிரச்சனைகளையும் குணமாக்குகிறது.

ஆஸ்துமா நோய்க்கு மருந்தாக திகழ்கிறது. பல்வேறு மருத்துவ முறைகளிலும் புதினா பயன்படுகிறது.

18.வல்லாரைகீரை:

Centella asiatica

Sudagarkrishnanchannels
Types of Greens and its benefits 


 யானைக்கால் நோயால் பாதிக்கபட்டவர்கள், வல்லாரை இலைகளை அரைத்து பூசி வந்தால் நல்ல பலன்கிடைக்கும். நோயின் தாக்கம் குறையும். வீரைவிக்கம் வாயுவீக்கம் குணமடையும். வல்லாரைக் கீரை இலைகளை முறைப்படி, எண்ணெய் ஆக்கி தலையில் தேய்த்துவந்தால் உடல் சூடு, உடல் எரிச்சல் குறையும். நீரிழிவு நோயாளிகளுக்கு வல்லாரைக் கீரை மிகவும் பயன்தருகிறது. மலச்சிக்கல் வாயு பிரச்சனைகளை நீக்க உதவுகிறது. வல்லாரைை கண் எரிச்சல் கண்களில் இருந்து நீர் வடிதல், இவற்றைை குணமாக்குகிறது. இருமல் இளைப்பு, தொண்டைை கட்டு இவற்றை குணமாக்குகிறது. வல்லாரை காசநோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. வல்லாரை பொடியை, கொண்டு பல் துலக்கினால் பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமையை கொடுக்கிறது. ரத்தசோகையை குணமாக்குகிறது. மூளை பலத்தையும் ஞாபக திறனையும் அதிகரிக்கிறது.


19. கொத்தமல்லிகீரை:

   கொத்துமல்லிக் கீரை கிமு 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கெட்ட கொழுப்பை அகற்றவும், உடலுக்கு குளிர்ச்சியைத் தரவும், ஜீரணத்தை சீராக்கவும் பயன்படுகிறது. கொத்தமல்லிக்கீரையில் விட்டமின் ஏ, சி இரும்புச் சத்துகள், பாஸ்பரஸ், துத்தநாகம், ஜிங்க் விட்டமின் கே போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. கொத்தமல்லி தண்ணீரை தினமும் குடிப்பது உயர் ரத்த சர்க்கரை அளவினை குறைக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது. உடல் பருமன் பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.


20.சுக்காங்கீரை: 


சுக்காங்கீரை உடலிலுள்ள அதிக  வெப்பத்தை தணித்து குளிர்ச்சியை தரவல்லது. இரத்தத்தை சுத்தபடுத்துவதோடு, புதிய ரத்தம் உற்பத்தி ஆகவும் உதவுகிறது. சாப்பிட மறுத்து அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, பசியை உருவாக்குவதோடு, சாப்பிடும் ஆர்வத்தையும் அதிகரிக்க உதவுகிறது. இந்தக் கீரை அதிக குளிர்ச்சியை தரவல்லது. அதனால் அடிக்கடி சாப்பிடாமல் வாரம் இரண்டு முறை சாப்பிடுவது சிறந்தது. பித்தம் சம்பந்தமான நோய்களை தீர்க்க வல்லது. பித்த தலைவலி, பித்த வாந்தி மயக்கம், உடல் சோர்வு இவற்றையும் குணமாக்குகிறது. வயிற்று வலியைக் குணமாக்குகிறது.


21. முடக்கத்தான் கீரை:

 முடக்கத்தான் கீரை ரசம், கூட்டு, சாம்பார், தோசை செய்து சாப்பிடலாம். முட்டுவலி, கைகால் வலியை குணமாக்கிறது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுகிறது. வாயு, வாதம் மலச்சிக்கல் பிரச்சனைகளை குணமாக்குகிறது.

22. முள்ளங்கி கீரை:

   முள்ளங்கி கீரையில் வைட்டமின் பி சி, ஏ அதிகம் உள்ளது. ஆனால் இந்த கீரையை அதிகமாக சாப்பிடக்கூடாது. ஏனெனில், இதயக் கோளாறுகள் வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புணடு. முள்ளங்கி இலை கீரை கண்களுக்கு நல்லது. கால்ஷியம் சத்து அதிகம் இருப்பதால் எலும்புகளுக்கு நல்ல உறுதியை கொடுக்கிறது.

23. தூதுவளைக்கீரை:

Solanum trilobatum

    தூதுவளைக் கீரையின் பூக்களை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வலு கொடுக்கும். பழத்தை வெயிலில் காயவைத்து உலர்த்தி சாப்பிட்டு வந்தால், மார்புச்சளி, இருமல், மூச்சிரைப்பு நீங்கும். பாம்பின் விஷத்தை கூட முறிக்கும். தூதுவளைக் கீரையின் இலைகள், பூக்கள், காய்கள், பழங்கள் அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டது. இதனை சூப், கீரை, தோசை, அடை போன்றவை செய்து சாப்பிடலாம். ஆண்மை குறைவை நீக்குகிறது. மூட்டுதேய்மானம் ஏற்படாது. கண் தொடர்பான நோய்களை குணமாக்குகிறது.

24. சிறுபசலைக்கீரை:

தரைபசலைக்கீரை:

 பசலைக்கீரரையில் ஒருவகையான சிறுபசலைக்கீரை தரையோடு படர்ந்திருக்கும். குளிர்ச்சியான இடம், காய்ந்த இடம் என எல்லா இடத்திலும் சுலபமாக படர்ந்திருக்கும். இதன் இலைகள்  எள்ளின் உருவத்தில் உருண்டு திரண்டு, வெந்தயம் அளவிற்கு பருமனாக இருக்கும். இலையும் கொடியும் சிவந்த நிறத்தில் இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது. காயங்களை ஆற்றுகிறது. சிறுநீரகங்களில் ஆரோக்கியத்திற்கும், வயிற்றுப்புண் குடல்புண் இவற்றுக்கும் மருந்தாக உள்ளது. இந்த கீரையை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவது நல்லது. தோல் வியாதிகள், காசநோய், கல்லீரல் பிரச்சனைகள் இவற்றையும் குணமாக்ககிறது. புற்றுநோய்க்கு எதிராகவும் சிறப்பாக செயல்படுகிறது.

25. காசினிக்கீரை:

Chicory

ந்தக் கீரைக்கு குளிர்ச்சியான தட்பவெப்பநலை அவசியமாகும்.
குளிர் பிரதேசங்கள் கொடைக்கானல் ஊட்டி சேர்வராயன் மலை பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது. நல்ல குளிர்ச்சியான தோப்பு பகுதிகளிலும் இதனை பயிரிடலாம் இந்த செடியில் இருந்துதான் எடுக்கப்படுகிறது. காசினிக்கீரை சிறுநீரக கற்களை சுலபமாக கரைக்கும், ஆற்றல் பெற்றது. காசினிக்கீரை பொடியை சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. கல்லீரல் சிறுநீரகம் இவற்றின் சிறந்த செயல்பாட்டிற்கு உதவுகிறது.
கிராமங்களில் காசினி கீரை, போண்டா கீரை என அழைப்பார்கள். ஏனெனில் கோண்டாவில் இந்த கீரையை நறுக்கி சேர்த்து சமைப்பார்கள். அதிக நன்மைகளை கொண்டது காசினிகீரை. அதனால் வாரம் ஒருமுறை இந்த கீரையை உணவில் சேராத்துக் கொள்ளுங்கள்.

  மேலே குறிபிட்ட இந்த 25- வகையான கீரைகளில் பெரும்பாலான கீரைகளை நாம் கடைகளில் பார்த்திருப்போம். சிலவற்றை சமைத்தும் சாப்பிட்டிருப்போம். இவை தவிரவும் இன்னும் பல வகையான கீரைகள் உள்ளன. அந்த கீரைகள் மூலிகை கீரைகள் என்று, மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தபட்டு வருகிறது. குறிப்பாக சித்த மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தபடுகிறது. 

  
Also Read 







  • முசுமுசுக்கீரை
  • மணலிகீரை
  • பொடுதலை கீரை
  • நருதாளிகீரை
  • மூக்குதட்டைகீரை
  • காரகொட்டிகீரை
  • துயிளிக்கீரை
  • கீழாநெல்லிக்கீரை
  • விழுதிக்கீரை
  • வெள்ளைக்கீரை
  • சாணக்கீரை
  • தவசிகீரை
  • சக்கரவர்த்திகீரை
  • வெள்ளை மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணிகீரை
  • பரட்டைகீரை
  • புண்ணாக்குகீரை
  • புளியங்கீரை
  • நஞ்சுமுண்டான்கீரை அல்லது நச்சுக்கொட்டைகீரை
  • தும்பைக்கீரை
  • ஓமவல்லி கீரை
  • எலிசெவிக்கீரை
  • துத்திக்கீரை
  • வாதநாராயணன் கீரை

  மைத்த கீரையை பிற காய்கறிகளை போல குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தமுடியாது. அதனாலேயே பல வீடுகளில் கீரைகள் அதிகம் தவிர்க்கப்படுகிறது. 
  • குழந்தைகளுக்கு பிறந்த ஆறு மாதத்திலிருந்தே கீரையை உணவில் சேர்க்கலாம். 
  • கீரைகளை மூடி இட்டு சமைக்க கூடாது. கீரைகளை வதக்கி சாப்பிடுவதை விட, மசித்து உண்டால், ஊட்டசத்துக்கள் வீணாவதை தடுக்கலாம். 
  • கீரைகளை அதிக நேரம் சமைக்க கூடாது.
  • கடைகளிலிருந்து வாங்கிய கீரைகளாய் இருந்தால், மஞ்சளும், உப்பும் கலந்த தண்ணீரில், கீரைகளை அலசி பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இலைகளின் மீது நேரிடையாக பூச்சிமருந்துகள் தெளிக்கபடுவதால், இவ்வாறு அலசி பயன்படுத்துங்கள். 

நம்ம மாடிதோட்டத்திலே 15 - வகையான கீரைகளை சுலபமாக வளர்க்கலாம். எப்படி வளர்க்கலாம் என்று நம் சேனலில் வீடியோ பதிவிட்டிருக்கிறேன். இந்த வீடியோவை பார்த்து, கீரைகளை வளர்த்து, தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து ஆரோக்கியமாக வாழுங்கள்.





நன்றி!!


இயற்கை விவசாயி!!

திரு.சுதாகர்கிருஷ்ணன்

Post a Comment

0 Comments