பச்சரிசி உடலுக்கு நல்லதா? அல்லது புழுங்கலரிசி உடலுக்கு நல்லதா?
![]() |
Raw Rice vs Boiled Rice |
அரிசி தமிழர்களின் வாழ்வில் பிரதான இடம் வகிக்கிறது. திருமணத்தில் அட்சதை வழங்குவதிலிருந்து, மனித வாழ்வின் கடைசி நிகழ்வான இறப்பிற்கு வாய்க்கரிசி போடுவது வரை, பல்வேறு நிகழ்வுகளில் அரிசி இன்றியமையாததாக தமிழர்களின் சடங்குகளில் இடம்பெறுகிறது. நம்முடைய வீடுகளில் அரிசி உணவு இல்லாத நாட்களே இல்லை எனலாம். அரிசி தமிழர்களின் முதன்மையான உணவு. அரிசி உற்பத்தியில் தாய்லாந்து பல ஆண்டுகாலமாக முதலிடம் வகித்தாலூம், இந்தியா 2012-ஆம் ஆண்டு உலகளவில் முதலிடம் பெற்றது. தற்போது 2020-ஆம் ஆண்டு நிலவரப்படி சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளது. இந்தியாவில் கிட்டதட்ட 2-இலட்சம் பாரம்பரிய நெல் வகைகள் இருந்ததாக வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.
முந்தைய காலகட்டங்களில் பச்சரிசி சாதம் மக்களால் விரும்பி உண்ணப்பட்டது. நாளடைவில் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி, இன்றளவில் அதிகமாக புழுங்கல் அரிசி சாதம் தான் மக்களால் அதிகம் விரும்பப்படுகிறது. ஆனாலும் சில உணவுகள் குறிப்பாக, பொங்கல், முறுக்கு வகைகள், புட்டு, ஆப்பம், இடியாப்பம், பலகார வகைகள் போன்ற பலவற்றிலும் பெரும்பாலும் பச்சரிசியை தான் பயன்படுத்துகிறோம். நிறைய பேருக்கு பல்வேறு சந்தேகங்கள் பச்சரிசி சிறந்ததா, புழுங்கலரிசி சிறந்தா?? பச்சரிசியை அறவே தவிர்த்துவிட வேண்டுமா? அல்லது அரிசி உணவுகளையே தவிர்த்துவிட வேண்டுமா? யார் யாரெல்லாம் அரிசி உணவுகளை சாப்பிடக் கூடாது? இத்தகைய கேள்விகளுக்கெல்லாம் தெளிவான விளக்கத்தை அறிந்து கொள்ளலாம். வாருங்கள் நண்பர்களே..!
பச்சரிசி:
பச்சரிசி என்பது நெல்லை அவிக்காமல் நேரிடையாக அதிலிருந்து அரிசியை எடுப்பதாகும். இது வேகவைக்கப்படாத அரிசி என்பதால் ஜீரணிக்க கடினமாகவும், அதிக நேரம் எடுக்கும் உணவாகவும் இருக்கிறது. பச்சரிசியில் உமி நீக்கப்படும் போது, அதனுடனே வைட்டமின் பி மற்றும் நார்சத்துக்கள் நீக்கப்பட்டுவிடுகிறது. உடல் மெலிந்து காணப்படுகிறவர்கள், உடல் தசை வளர்ச்சிக்கு பச்சரியை சாப்பிடலாம். பச்சரிசியை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சத்து அதிகரிக்கும். கொழுப்புச் சத்து குறைந்து உடல் நலிந்து காணப்படுபவர்கள் பச்சரிசி உணவாக எடுத்துக் கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளில் பிரச்சனை உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.
புழுங்கலரிசி:
புழுங்கலரிசி என்பது நெல்லை வேக வைத்து எடுப்பது. இதனால் நெல்லின் தோலுக்கடியில் உள்ள வைட்டமின் பி மற்றும் நார்சத்து அப்படியே அரிசியில் பாதுகாக்கப்படுகிறது. அதனால் தான் பச்சரிசியை விட புழுங்கல் அரிசி சிறந்ததாக வரவேற்க்கப்படுகிறது. புழுங்கலரிசி எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவாகும். புழுங்கல் அரிசி உணவு ஜீரணமாக ஒரு மணி நேரம் கூட போதும். எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு மற்றும் அதிக பைபர் கொண்டது என்பதால், குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் மிகச்சிறந்த உணவாக புழுங்கலரிசி அறிவுறுத்தப்படுகிறது. குழந்தைகளின் முதல் உணவாக அரிசிகஞ்சியே குழந்தை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. அது போல நோயுற்ற காலங்களிலும், வயதானவர்களுக்கும் அரிசி கஞ்சி சிறந்த உணவாகவே இருந்து வருகிறது.
இன்றளவில் நாம் சாப்பிடும் புழுங்கல் அரிசி வெள்ளை நிறத்திற்காகவும், அளவில் சிறியதாக இருப்பதற்காகவும் அதிகமாக பாலிஸ் செய்யப்படுகிறது. அந்த அரிசியை பலமுறை கழுவி, சமைப்பதற்காக வேக வைத்தும், அந்த தண்ணீரையும் வடித்தும் எந்த ஊட்டசத்துகளுமே இல்லாத சக்கையாக சாப்பிடுகிறோம். பாலிஷ் செய்யப்படாத அரிசியில் தான் மேற்குறிப்பிட்ட சத்துக்கள் கிடைக்கும். சாமை அரிசி, திணை அரிசி, கைகுத்தல் அரிசி, சிகப்பரிசி, கவுனி அரிசி, பாஸ்மதி அரிசி, சீரகசம்பா அரிசி, வரகரிசி, பனிவரகரிசி, குதிரைவாலி அரிசி போன்றவை அதிக ஊட்டசத்துக்களை கொண்டதாகவும் சாப்பிடுவதற்கு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் உள்ள அரிசி வகைகளாகும். இவையெல்லாம் அன்றாட உணவிற்கு தாராளமாக பயன்படுத்தலாம்.
அரிசி உணவுகளை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
அரிசி தானிய வகையை சேர்ந்தது தானே. பிறகு ஏன் தவிர்க்க வேண்டும்? அரிசி உணவுகளை எடுத்துகொண்ட சில மணி நேரங்களிலே செரித்து, அதன் ஆற்றல் இரத்தத்தில் கலந்துவிடுகிறது. காலையில் இட்லியோ தோசையோ சாப்பிடுகிறோம் என வைத்துக் கொள்ளுவோம்.. அந்த உணவு மூன்று மணி நேரத்தில் செரித்துவிடும். சாதாரணமாக நமது உணவில் 80 முதல் 110 வரையில் மட்டுமே சர்க்கரையின் அளவு இருக்க வேண்டும். ஆனால் அரிசி உணவின் மூலம் வெளியிடப்படும் அதிகபட்ச ஆற்றல் {சர்க்கரையின் அளவு} உடம்பில் சேமித்து வைக்கப்படுகிறது. இது சாதாரண உடல்நிலை கொண்டவர்களுக்கு சரிதான். ஆனால் நீரிழிவு கொண்டவர்களுக்கு, இந்த சர்க்கரையின் அளவு காரணமாக இன்சுலின் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் அரிசி உணவை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது. மேலும் இதய நோய் உள்ளவர்கள், உடல் பருமன் கோளாறுகள், நீரிழிவு நோயாளிகள், மூட்டுவலி உள்ளவர்கள், விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபடுபவர்கள் பச்சரிசி எடுத்து கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும்.
அரிசி உணவினை எந்த அளவிற்கு எடுத்து கொள்ள வேண்டும்?
நல்ல ஆரோக்கியமான ஒரு மனிதன் நாளொன்றிற்கு ஒரு கிண்ணம் அளவிற்கு அரிசி உணவினை எடுத்து கொண்டாலே அன்றைய நாளுக்கு தேவையான ஆற்றல் கிடைத்துவிடும். 100 கிராம் அரிசியில் நானூறு கிலோ கலோரிகள் சக்தி கிடைக்கிறது. மூன்று வேளைகளுமே அரிசி உணவினை எடுப்பதை தவிர்த்து, பல்வேறு தானியங்கள், காய்கறிகள் அடங்கிய சரிவிகித உணவாக இருப்பது சிறந்தது.
அரிசி உணவை சாப்பிட்டால் உடலுக்கு உடனடியாக ஆற்றல் கிடைத்துவிடுகிறது. அதனால் தான் வேறெந்த உணவு சாப்பிட்டாலும் ஏற்படாத திருப்தி ஒரு கைப்பிடி அரிசி சாதம் சாப்பிட்டதும் கிடைத்துவிடுகிறது. வெளிநாட்டு உணவுகளின் மீதான மோகத்தினால் அரிசி உணவுகளை முழுவதுமாக தவிர்த்து விடுகின்றனர் பலர். நமது பாரம்பரிய அரிசி வகைகளான சிகப்பரிசி , மட்டரிசி, கவுனி அரிசி, திணை சாமை போன்ற பலவகை ஊட்டசத்துக்கள் அதிகம் நிறைந்த அரிசிகளில் கொழுகட்டை, புட்டு, முறுக்கு போன்ற பல சிற்றுண்டி வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இந்த பாரம்பரிய அரிசி வகைகளில் "கிளைசமிக் இன்டக்ஸ்" எனப்படும் சாப்பிட்டவுடன் இரத்தில் கலக்கும் ஆற்றல் மிகவும் குறைவு. விரைவாக இந்த உணவுகள் செரிக்காமல் நீண்ட நேரம் எடுத்து கொள்வதால் உடலை கட்டுகோப்பாக வைத்து, நீண்ட கால ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது.
பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே சிறந்தது. ஆனால் புழுங்கல் அரிசி பட்டை தீட்டாத உமி நீக்கப்படாத, கைகுத்தல் அரிசியாக இருப்பதே சிறந்தது. மேலும் அதிக ஊட்டசத்துக்களும் எவ்வித கேடும் விளைவிக்காத எண்ணற்ற பாரம்பரிய அரிசி வகைகள் உள்ளது. அவற்றை பாதுகாக்க அதிகமாக அந்த உணவுகளை நாம் நடைமுறையில் பழக்கபடுத்தி கொள்ள வேண்டும். அது ஆரோக்கியத்திற்கும் நம் வீட்டிற்கும் நாட்டிற்கும் வருங்கால சந்ததியினருக்கும் நல்லது என்பதே இந்த பதிவின் சாராம்சம்!! நன்றி!!
அன்புடன்,
இயற்கை விவசாயி.
திரு.சுதாகர்கிருஷ்ணன்.
0 Comments