Translate

வெற்றிலை வளர்ப்பு மற்றும் மருத்துவ பயன்கள்

 Betel leaves medicinal uses 

 மங்களகர நிகழ்வுகளிலும், விருந்து விழாக்களிலும் வெற்றிலை முதன்மையானதொரு இடத்தை வகிக்கிறது. வெற்றிலை பாக்கு தமிழரின் பாரம்பரிய வழக்கங்களில், இன்றுவரை தொன்றுதொட்டு பின்பற்றப்படும் பழக்கங்களில் ஒன்றாக மாறாமல் இருந்துவருகிறது. பழங்களோ, பலகாரமோ, பூக்களோ, இனிப்பு வகைகளோ எதுவுமே இல்லையென்றாலும், வெற்றிலை பாக்கு மட்டுமே இருந்தாலே போதும்., சுபகாரியங்கள் துவங்குவதற்கு. வெற்றிலைக்கு காரணமில்லாமல் நம்முடைய முன்னோர்கள் இத்தகைய தலைமை இடத்தை அளித்துவிடவில்லை. வெற்றிலையின் நுனிபகுதியில் லட்சுமியும், நடுபகுதியில் சரஸ்வதியும், காம்புபகுதியில் பார்வதிதேவியும் வசிப்பதாக இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறைவனுக்கு எத்தனை பொருட்களில் பூஜை செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்தப்பூஜை முற்றுபெறாது. திருமண சுபகாரியங்கள், பூஜைகள் சுபமாக நடைபெறுவதற்காக வெற்றிலை  படைக்கப்படுகிறது. வெற்றிலையும் பாக்கும், மகாலட்சுமியின் அம்சங்களாகும். வெற்றிலையை வாடவிடுவது குடும்பத்திற்கு ஆகாது. வெற்றிலை பாக்கை வலக்கையால் தான் வாங்கவேண்டும். வெற்றிலை பாக்கை  கொடுத்து எந்தவொரு நிகழ்ச்சிக்கும் ஒருவரை வரவேற்க்கும் பொழுது, அவருக்கு நாம் கொடுக்கும் உயரிய மரியாதையாகும். வெற்றிலை வீடுகளில் வளர்ப்பதால் குடும்பம் செழித்தோங்கும். இன்றைய பதிவில் வெற்றிலை மாடிதோட்டம்  வீட்டுத்தோட்டங்களில் எப்படி வளர்க்கலாம் என்றும், வெற்றிலையின் மருத்துவ பயன்களையும் அறிந்துகொள்ளலாம்.

வெற்றிலை/Betel  leaf/ Piper Betle ஒர் அறிமுகம்:


   வெற்றிலை மலேசியாவை தாயமாக கொண்ட மருத்துவ மூலிகையாகும். இந்தியா இந்தோனேஷியாவில் அதிகம் வளர்க்கப்படுகிறது. தமிழகத்தின் கும்பகோணம் வெற்றிலை, உலகளவில் பிரசித்தி பெற்றது. தமிழகத்தின் தஞ்சை, தேனி, காவிரிக்கரை, நாமக்கல், கரூர், திருச்சி மாவட்டங்களில் பணப்பயிராக அதிகம் பயிரிடப்படுகிறது. 
 கருகருவென அடர்பச்சை நிறத்தில் இருக்கும் வெற்றிலைகளை ஆண்வெற்றிலை எனவும், இளம் பச்சை நிற வெற்றிலைகளை பெண் வெற்றிலை எனவும் வகைபடுத்தப்படுகிறது.
வெற்றிலையில் கருப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை, சாதாரண வெற்றிலை அல்லது வெள்ளை வெற்றிலை, கற்புரவெற்றிலை,போன்ற வகைகள் உள்ளது. கற்புர வெற்றிலை கற்புர மணமுடன் தாமரை இலைகளை போன்று பெரிய இலைகளை கொண்டு காணப்படும். வெற்றிலை சதுப்பு நிலங்களிலும், இந்தியாவில் வெப்பமண்டலங்களிலும் வளரக்கூடியது. கொடிவகையைச் சார்ந்தது. நாகவல்லி, தாம்பூலம், திரையல், வேந்தன் போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இலங்கை யாழ்பாணத்தில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. பொதுவாக  அகத்திமரம், முருங்கை மரம், வாழை மரம் இவற்றின் இடையே ஊடுபயிராக வெற்றிலை வளர்க்கப்படுகிறது. இலங்கையில்  கிளுவை மரங்களுக்கிடையில் வளர்க்கப்படுகிறது.

Sudagar krishnan channels
Betel leaf Plant 

வெற்றிலை வளர்ப்பு:

   வெற்றிலை இலைகளை காம்புகளுடன் பறித்து பதியம் போட்டு தான் பொதுவாக வெற்றிலை வளர்க்கப்படுகிறது. விதைகள் என்று எதுவும் இல்லை. வெற்றிலை பயிர்செய்யப்படும் பகுதியினை கொடிக்கால் என்று அழைப்பார்கள். மிதமான  தட்பவெப்ப சூழல், தண்ணீர் வடிகால் வசதி, நல்ல மண்வளம் இவற்றில் வெற்றிலை பயிரிடப்படுகிறது. குறைந்தது மூன்று, நான்கு கணுக்கள் உள்ள பகுதிகளாக, வெற்றிலையை கத்தரித்து எடுத்துவந்து பதியம் போட வேண்டும். நடவு செய்வதற்கு முன் அசோஸ்பைரில்லத்தில் சிறிதுநேரம் காம்பை நனைத்து பின்னர் பதியம் போட வேண்டும். நர்சரியிலிருந்து செடிகளாக வாங்கிவைத்தும் வளர்க்கலாம். வெற்றிலை வளர்ப்பதற்கு நல்ல வடிகால் வசதியுடைய கரிசல் மண் ஏற்றது. பொதுவாகவே வெற்றிலைக்கொடி வளர்ப்பதற்க்கு நிழற்பாங்கான இடமே சிறந்தது. வயல்வெளிகளில் அகத்திக் கீரை மரத்திற்கு கீழே ஊடுபயிராக வெற்றிலை கொடியை வளர்க்கின்றனர். நமது வீட்டில் வெற்றிக்கொடியை சுலபமாக வளர்க்கலாம். முதலில் வெற்றிலை கொடியை வளர்ப்பதற்கு நிழற்பாங்கான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். வீட்டுத்தோட்டத்தில் வளர்க்க வேண்டுமென்றால் தோட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு மரத்திற்கு கீழே வெற்றிலை கொடியை வைத்து மரத்தின் மேல் படற விடலாம்.

மாடி தோட்டத்தில் வெற்றிலை வளர்க்க முதலில் தரமான, சரியான மண் கலவை தயாரிக்க வேண்டும்.

மண்கலவை

தேவையான பொருட்கள் அளவுகள்
தோட்டத்துமண்/செம்மண்  2-மடங்கு
மணல்/தேங்காய் நார் கழிவு  1-மடங்கு
மண்புழு உரம்/காய்கறி கழிவு உரம்/தொழு உரம்  1- மடங்கு
வேப்பம்புண்ணாக்கு  ஒருகைப்பிடி அளவு
உயிர்உரங்கள்- சூடோமோனஸ், ட்ரைக்கோட்ரமாவிரிடி,
அசோஸ்பைரில்லம், பொட்டாஷ்பாக்டிரியா
அனைத்திலும் ஒரு ஸ்பூன்

 மேற்குறிப்பிட்டுள்ள அட்டவணை, ஒரு தொட்டி (Grow bag)  அளவிற்கான மண்கலவை. மண் கலவை தயார் செய்து ஏழு நாட்கள் நிழற்பாங்கான இடத்தில் வைத்து, தண்ணீர் தெளித்துவர வேண்டும். தண்ணீருக்கு பதிலாக Waste DeComposer கூட தெளித்துவரலாம். மண்கலவை தயாரானதும், வெற்றிலை கொடியை நடவு செய்யலாம்.

வெற்றிலை தொடர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பும்:


  •  மாடித்தோட்டத்தில் வெற்றிலையை வைக்கும்போது நிழற்பாங்கான இடத்தில் வைப்பது மிகவும் சிறந்தது. அதிக வெயில் படும்படியான இடத்தில் வெற்றிலை கொடியை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். 
  • வெற்றிலைக்கு தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
  •  வெயில் காலங்களில் வெற்றிலைக் கொடியின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருக்கும் வெற்றிலையின் இலைகளின் ஓரத்தில் காய்ந்துபோய் இருக்கும் இது பொட்டாசியம் குறைபாடு. இந்த நேரத்தில் சாம்பல் அல்லது வாழைப்பழத்தோல் தண்ணீரில் ஊறவைத்து வேர்பகுதியில் ஊற்றி வந்தால் இலைகள் ஓரத்தில் காயாமல் வெற்றிலை கொடி ஆரோக்கியமாக வளர ஆரம்பிக்கும். 
  • வெற்றிலைக் கொடிக்கு என்று தனியாக உரங்கள் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது வீட்டிலேயே இருக்கும் அரிசி கழுவிய தண்ணீர், சாப்பாடு வடித்த கஞ்சி, காய்கறி கழுவிய தண்ணீர், புளித்த மாவு, இவைகளை தண்ணீரில் கலந்து கொடுத்து வரலாம்.
  • வெற்றிலை கொடிக்கு அதிக தழைச்சத்து சாம்பல் சத்தும் கொடுப்பது அவசியம். 
  • வெற்றிலை இலைகளில் இலைச்சுருட்டு நோய்கள் அதிகம் பாதிக்கும். அப்போது மூன்றிலிருந்து ஏழு நாட்கள் வரை புளித்த மோருடன் ஒன்பது மடங்கு தண்ணீர் கலந்து இலைகளின் மேல் தெளித்து விடலாம். 


  • வெற்றிலைக் கொடி ஒரு வருடத்தில் 3 மீட்டர் வரை வளரும் தன்மை உடையது. வெற்றிலை கொடியை நடவு செய்து 120 நாட்களில் இலைகளை பறிக்க ஆரம்பிக்கலாம். மூன்று ஆண்டுகள் வரை பறித்துக் கொண்டே இருக்கலாம்.


Sudagarkrishnanchannels
Betel leaf Plant 

வெற்றிலையின் மருத்துவ பயன்கள்:  

  வெற்றிலையில் கால்சியம், இரும்புசத்து, தயமின், ரிபோபிளேவின், கரோட்டின் மற்றும் வைட்டமின் சி சத்து அதிகமாய் உள்ளது. வெற்றிலை 44 கலோரிகளை மட்டுமே கொண்டது. தற்போதைய ஆராய்ச்சியில் வெற்றிலையில் வீரியமிக்க நோய் எதிர்ப்புதிறனை அளிக்ககூடிய Chavicol  என்னும் பினைல்புரோபின் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

  
ஊட்டசத்துக்கள் விகிதம்
நீர்ச்சத்து 84.4%
புரதசத்து 3.1%
கொழுப்புசத்து 0.8%


வெற்றிலை அதிக மருத்துவகுணங்களை கொண்டது. உமிழ்நீரை பெருக்குகிறது. பால் சுரக்க உதவுகிறது. ஆண்மையை அதிகரிக்கும் அருமருந்து. வாய் துர்நாற்றத்தை குணமடையச்செய்கிறது. வாயுவை கட்டுபடுத்தும். மூளை, கல்லீரல்  மண்ணீரல் இதயம்  போன்றவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை அளிக்கிறது. காதுவலிக்கு வெற்றிலை சாறை இரண்டு சொட்டுகள் காதில் விட குணமடையும். மூளையை பலபடுத்தி ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. நெஞ்சு சளி கோழை மூச்சுத்திணறல் இவற்றை மூச்சுத் திணறல் இவற்றை குணமாகிறது. நெஞ்சுசளியால் அவதிப்படும் பொழுது கடுகு எண்ணெயில் வெற்றிலையை வாட்டி இளம்சூடான பக்குவத்தில் நெஞ்சின் மீது வைக்கும்பொழுது கோழை சளி கரைந்து வெளியேறி விடுகிறது. வெற்றிலையுடன் 2ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டு வரும்பொழுது நரம்புகள் வலுவடைந்து, மூளை நரம்புகள் பலம் பெற்று ஞாபக சக்தி அதிகரிக்கிறது. உடல் எடை குறைப்பில் வெற்றிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வெற்றிலையுடன் மிளகு சேர்த்து நன்றாக மென்று, அதன் சாற்றினை மட்டும் விழுங்கி வர நாளடைவில் உடல் மெலிய ஆரம்பிக்கும். யானை கால் வீக்கத்தை வெற்றிலை தேநீர் குறைக்கிறது. யானை கால் வீக்கத்திற்கு மேல் பூச்சாக கூட வெற்றிலையை பயன்படுத்தலாம்.
  புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது. உடலின் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் பற்கள், ஈறுகள் பலம் அடைகிறது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு கட்டுப்படுத்தப்படுகிறது. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.  தினமும் வெற்றிலை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளிப்பதால்,  பற்கள் ஈறுகளுக்கு பாதுகாப்பு. வாய்ப் புண்ணையும் குணமடையச் செய்யும். வெற்றிலைச் சாறுடன் நீர் கலந்து அருந்தி வரும்பொழுது சிறுநீர் பிரச்சனைகள் குணம் அடைந்து, சிறுநீர் நன்றாக பிரியும். ஆண்மை குறைபாட்டை நீக்குகிறது. வெற்றிலை அனைத்து வலிகளையும், சிராய்ப்புகள், காயங்கள் இவற்றை குணமாக்குகிறது. இதற்கு வெளி மருந்தாகவும் வெற்றிலை சாறினை உட் மருந்தாகவும் ஏடுத்துக்கொள்ளலாம். இரைப்பையில் ஏற்படும் நோயையும் இரைப்பை வலியையும் குணமாக்குகிறது. உங்களுக்கு இரைப்பை வலி ஏற்பட்டால் உடனே இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிடுங்கள். சிறந்த வலி நிவாரணியாக செயல்பட்டு வலியை குறைக்கிறது. 
தொடர் இருமலை கட்டுபடுத்த, வெற்றிலையுடன் கிராம்பு, ஏலக்காயை சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரை, தினமும் இரண்டு வேளை குடித்துவர வேண்டும். தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு அருமையான உடனடிதீர்வு தரும் மருந்து. வெற்றிலை இலைகளை நெற்றியில் ஒட்டிகொண்டாலே போதும். ஒற்றைதலைவலி, தலைபாரம், தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.  வெற்றிலை நம்முடைய வீடுகளில் வளர்ப்பது, ஆரோக்கிய வாழ்விற்கான வழியாகும். பலநோய்களுக்கும் ஒரே மருந்தாக திகழ்கிறது. பக்க விளைவுகள் அற்றது.  தாம்பூலம் கொடுப்பது போன்ற பல்வேறு விஷயங்கள், வெறும் சாம்பிரதயத்திற்கோ, சாங்கியத்திற்கோ, மூடநம்பிக்கைகளோ அல்ல; அதற்கு பின்பாக ஆரோக்கிய வாழ்வியலும், மருத்துவகாரணங்களும், அறிவியல் உண்மைகளும் உள்ளது. நன்றி!!





Post a Comment

7 Comments