Translate

முருங்கை கீரை பொரியல்

முருங்கைகீரை/Moringa Oleifera/Drumstick:



             முருங்கை மரம் ஒருவருடைய வீட்டில் இருந்தால், அங்கு ஆரோக்கியத்திற்கு குறைவிருக்காது. முருங்கையை நட்டவன் வெறுங்கையோடு போவான் என்றொரு பழமொழி வழக்கில் உள்ளது. இப்பழமொழியின் விளக்கம் என்னவென்றால், முருங்கையை நட்டவர்கள், (பயன்படுத்துபவர்கள்) பிற்காலங்களில் அதாவது வயதானகாலத்தில் கோலூன்றி நடக்காமல், உடல் வலிமையுடன் இளமையுடனே வாழ்வார்கள். முருங்கையின் இலைகள், முருங்கைக்காய் முருங்கைமர பிசின், முருங்கை பூக்கள் அனைத்தும் மருந்தாக பயன்படுகிறது. உடலுக்கு முழுமையான ஆரோக்கியத்தை தருகிறது. முருங்கை மரத்தினை நம்முடைய வீடுகளில் வளர்ப்பது மிகவும் சுலபமானது. முருங்கை மரத்திற்கு பெரிய பராமரிப்பு ஏதும் தேவையில்லை.  முருங்கையின் கிளையை  கொண்டு வந்து ஊன்றி வைத்தால் வளர்ந்து விடும்.  முருங்கை மரம் வைத்து வளர்க்க இடமில்லாதவர்களுக்காகவே செடிமுருங்கை  உள்ளது.  செடி முருங்கையை நம்முடைய மாடித்தோட்டத்தில்   ஐம்பதுலிட்டர் கேன், பெயிண்ட் டப்பா இவற்றிலும் கூட வளர்க்கலாம். செடிமுருங்கை மரத்தின் வளர்ப்பு குறித்து சமீபத்தில் தான் கட்டுரை ஒன்று நம்முடைய வலைதளத்தில் பதிவிடபட்டிருக்கிறது. உங்களுக்கு நேரம் இருந்தால்  படித்து பாருங்கள். அளவில்லாத சத்துக்களை கொண்ட முருங்கைகீரையை எதாவது ஒருவகையில் உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. முருங்கைகீரை அடை, முருங்கைகீரை சூப், முருங்கைகீரை சாம்பார் , பொரியல் இவ்வாறு பலவகை உணவுகள் முருங்கைகீரையில் தயாரிக்கப்படுகிறது.


முருங்கை கீரை பொரியல்/Drumstick leaves  fry:

Method -1

Sudagarkrishnanchannels
Murungai keerai Poriyal 


தேவையான பொருட்கள்:

  • முருங்கை கீரை- தேவையான அளவு
  • வெங்காயம்-1
  • பூண்டு-7பல்
  • மஞ்சள் தூள்-1சிட்டிகை
  • வரமிளகாய்-5
  • உப்பு-தேவையான அளவு
  • வேர்கடலை-1ஸ்பூன்
  • எள்-1ஸ்பூன்

தாளிக்க:

  • கடுகு-1/2ஸ்பூன்
  • சீரகம்-1/2ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு-1/2ஸ்பூன்
  • நல்லெண்ய்-3 ஸ்பூன்

செய்முறை:

     கடாயில் குழிகரண்டியளவு நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் ஊற்றி கடுகு அரைஸ்பூன் , உளுத்தம் பருப்பு அரைஸ்பூன், சீரகம் அரைஸ்பூன் தாளித்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பூண்டு பற்கள், வர மிளகாய் ஐந்து, கிள்ளி போட்டு பொன்னிறமாக வதக்கவும். முருங்கை கீரையை சுத்தம் செய்து, தண்ணீரில் நன்றாக அலசி கொள்ளவும். இளம் கீரைகளாக இருந்தால் பொரியல் சுவையாக இருக்கும். இளம்கீரைகளாக தேர்ந்தெடுத்து பறித்துகொள்ளுங்கள். மஞ்சள் இலைகள், பூச்சி அரித்த இலைகளை நீக்கிவிடவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் சிறிது, சிறிதாக முருங்கை கீரையை சேர்த்து வதக்கவும். கீரை ஓரளவு வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொள்ளவும். தண்ணீர் தெளித்து வதக்கினால் போதும், ஏனெனில் கீரைகள், காய்கறிகள் போல் அடர்த்தியான சதைப்பகுதியை கொண்டதில்லை. கீரைகளை அதிகநேரம் வெப்பப்படுத்தினால், ஊட்டசத்துக்கள் குறைந்து விடும். குறைந்த தீயில், மூடி இட்டு ஏழு நிமிடங்கள் வேக வைத்தால் போதும். தண்ணீர் வற்றியதும் அடுப்பை நிறுத்தி விடுங்கள். இப்படியே சாப்பிட சுவையாக தான் இருக்கும். நீங்கள் விரும்பினால் இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளலாம். அல்லது வெறும் கடாயில் வேர்கடலை, எள் வறுத்து, ஒன்றும் பாதியாக பொடித்து பொரியலுடன் கலந்து கொள்ளலாம். மிகவும் ஊட்டசத்துக்கள் வாய்ந்தது. அதிகளவில் இரும்பு சத்து கொண்டது. தண்ணியான சாம்பார், ரசத்திற்கு நல்ல காமினேஷன். குழந்தைகளுக்கு சாதத்தில் சிறிது நெய் சேர்த்து, கீரை பொரியலை அப்படியே சேர்த்து பிசைந்து கொடுக்கலாம். வாரம் இரண்டு, மூன்று முறை உணவாக எடுப்பது இமோகுளோபின் அதிகரிக்க சிறந்த வழியாகும்.



முருங்கை  கீரை பொரியல்:

Method -2

Sudagarkrishnanchannels
Murungai keerai Poriyal 


தேவையான பொருட்கள்:

  • முருங்கை கீரை- இரண்டு கப்
  • வெங்காயம்-1 பெரியது
  • மஞ்சள் தூள்-1சிட்டிகை
  • உப்புத்தூள்- 1ஸ்பூன்

வறுத்து அரைக்க:

  • வேர்கடலை-1ஸ்பூன்
  • எள்-1ஸ்பூன்
  • சீரகம்- 1/2 ஸ்பூன்
  • பூண்டு-4 பல்
  • வரமிளகாய்-3

தாளிக்க:

  • கடுகு-1/2ஸ்பூன்
  • சீரகம்-1/2ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு-1/2ஸ்பூன்
  • நல்லெண்ய்-3 ஸ்பூன்

செய்முறை:

         கடாயில் குழிகரண்டியளவு நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு அரைஸ்பூன் , உளுத்தம் பருப்பு அரைஸ்பூன், சீரகம் அரைஸ்பூன் தாளித்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வதக்கிகொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் சிறிது, சிறிதாக முருங்கை கீரையை சேர்த்து வதக்கவும். கீரை ஓரளவு வதங்கியதும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொள்ளவும். கீரையை மூடியிட்டு குறைந்த தீயில் வேக வைத்துக் கொள்ளவும். ஐந்து நிமிடங்களில் இருந்து ஏழு நிமிடங்கள் வரை வேக வைத்தால் போதும். இப்பொழுது வெறும் கடாயில் நிலக்கடலை இரண்டு ஸ்பூன், சீரகம் ஒரு ஸ்பூன், எள்ளு ஒரு ஸ்பூன், வர மிளகாய் மூன்று, பூண்டு  ஐந்து பற்கள் இவற்றை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் வறுத்த வேர்க்கடலை பிற பொருட்களையும், சிறிது நேரம் ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மழமழவென்று அரைக்காமல் முக்கால் பாகம் அரைத்துக் கொள்ளவும். வேகவைத்த முருங்கைக்கீரை பொரியலில் வறுத்தரைத்த வேர்கடலைப் பொடிகளை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி கொள்ளவும். உப்பு சுவைத்து பார்த்து கொள்ளவும். இப்பொழுது சுவையான முருங்கைக்கீரை பொரியல் தயாராகிவிட்டது. இந்த முறையில் முருங்கைக்கீரை செய்யும் பொழுது மிகவும் சுவையாக இருக்கும். ஒருமுறை சமைத்தால் உங்களை எல்லோரும் பாராட்டுவார்கள். திரும்பத்திரும்பச் சமைப்பீர்கள்.

முருங்கைகீரையில் உள்ள ஊட்டசத்துக்கள்:

          முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து சோடியம், மெக்னீசியம், பொட்டாசியம் காப்பர், ஜிங்க் வைட்டமின் ஏ, புரோட்டின், பைபர், கொழுப்பு, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி பீட்டாகரோட்டின், அமினோஆசிட்ஸ் போன்ற ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது.
முருங்கைகீரையானது தாய்பாலூட்டும் தாய்மார்களுக்கு வரப்பிரசாதமாகும் முருங்கை கீரை சாப்பிடுவதால் தாய்பால் சுரப்பு அதிகமாவதோடு, தாய்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது.  பிரசவத்தின் போது இழக்கப்படும் அதிகளவு சத்துக்களை மீட்டெடுக்க குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் உணவாகக் கொடுக்கலாம். இமோகுளோபின் அதிகரிக்க உதவுகிறது. இரத்தசோகை நோயை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த மருந்தாகும். ஆண்கள் பெண்கள் இருவருக்கும் ஏற்படும் மலட்டுத்தன்மையை  நீக்குகிறது. முருங்கை இலைகளை வேகவைத்து, வேக வைத்த தண்ணீரை குடித்து வருவதன் மூலம் உடல் சூடு தணிந்து மலச்சிக்கலும் கட்டுப்படுகிறது. உடலில் கைகால்களில் வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவலிகளால் அவதிப்படுபவர்கள் முருங்கை இலைகளை பறித்து அம்மியில் அரைத்து, வலியுள்ள இடத்தில், பற்று போல போட்டு வரலாம். மேலும் முருங்கை இலைகளை உருவி எடுத்துவிட்டு, முருங்கை காம்புகளோடு மிளகு, சீரகம் சேர்த்து ரசம் வைத்து, முருங்கைக் கீரை ரசம் சாப்பிட்டால் வலிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பற்கள் ஈறுகள் தொடர்பான நோய்களை குணமாக்குகிறது. பற்களும் ஈறுகளும் வலிமை பெறுவதற்கு உதவி செய்கிறது. வாய்ப்புண் வயிற்றுப்புண் இவற்றையும் குணமாக்க வல்லது. தலைமுடி உதிர்வு முடி நரைத்து போதல், தலை சூடாக இருத்தல் இவற்றையும் குணமாக்குகிறது. முருங்கைக் கீரையில் புரதச் சத்துகளும் வைட்டமின்களும் நிறைந்து உள்ளது. சளி இருமல் சுவாச கோளாறுகள், நுரையீரல் பிரச்சனைகளுக்கு முருங்கைக்கீரை சூப் சிறந்த பயனைக் கொடுக்கும். வாரம் இருமுறை முருங்கைக் கீரை சூப் எடுத்து வரும் பொழுது குளிர்காலங்களில் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு நல்ல பலன் கொடுக்கும். பிறகீரைகளை காட்டிலும் ஏழுபத்தைந்து சதவீகிதம் இரும்புசத்து முருங்கைகீரையில் உள்ளது. ஆரஞ்சு பழத்தினை காட்டிலூம்  ஏழுமடங்கு வைட்டமின் சி முருங்கைகீரையில் உள்ளது. வீட்டில் வளர்க்கின்ற செல்லப்பிராணிகளான நாய், பூனை கடிகளுக்கு முருங்கைகீரையுடன், மிளகு  பூண்டு சேர்த்து சாப்பிட காயங்களும் குணமடையும், வலியும் குறையும், விரைவில் குணமடையலாம். முருங்கைகீரையில் பால், தயிரில் இருப்பதை விட, இரண்டுமடங்கு புரதசத்து உள்ளது. முருங்ககீரைசாறுடன், எலுமிச்சை சாறு கலந்து எடுத்துக்கொள்ளும்போது, நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கிறது. பல்வேறுவகையான நோய்களுக்கும் மருந்தாகிறது. சுலபமாக கிடைக்ககூடிய கீரைவகையாகும். கடையில் வாங்குவதைவிட நம்முடைய தோட்டங்களில் வளர்த்து பயன்படுத்தும்போது, மேற்குறிபிட்ட ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் முழுமையாக நமக்கு கிடைக்கிறது. நன்றி!!
 
கோ.இந்திரா பிரியதர்ஷினி Msc MEd  MBA





Post a Comment

0 Comments